புதுச்சேரியில் உள்ள தங்கும் விடுதிகளில் புதன்கிழமை இரவு போலீஸார் திடீரென நடத்திய சோதனையில் பாலியல் தொழில் நடத்தியதாக 15 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். சிறுமி உள்பட 9 பெண்கள் மீட்கப்பட்டனர்.
புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் சிலவற்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, புதன்கிழமை இரவு முதுநிலை எஸ்பி அகன்ஷா யாதவ் தலைமையில் தன்வந்திரி நகர் காவல் ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட போலீஸார் புதுச்சேரியில் உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், காமராஜர் சாலை பிருந்தாவனம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பாலியல் தொழில் நடத்தியதாக தட்டாஞ்சாவடி ரவிசங்கர் (45), நெல்லித்தோப்பு சிவசங்கர் (34), கருணாகரன் (40), ரெட்டியார்பாளையம் ஜான்பால் (37), ராஜா நகர் ரஞ்சித்குமார் (40) ஆகியோரும்,
அரும்பார்த்தபுரம் நேரு வீதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடத்த வீடு கொடுத்த உருளையன்பேட்டை வேலுமணி (68), இடைத்தரகர்கள் தேங்காய்த்திட்டு ராஜேஷ் (எ)ராஜேஷ்வரன் (25) ஆகியோரும், எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள விடுதியில் பாலியல் தொழில் இடைத்தரகர்களான கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த கெவின் (எ) செல்வம் (38), புதுச்சேரி தேங்காய்திட்டு நாகராஜ் (31), கம்பன் நகர் பாலமுருகன் (40) ஆகியோரும், 100 அடி சாலை மேம்பாலம் அருகே உள்ள ஹோட்டலில் பாலியல் தொழில் நடத்தியதாக காஞ்சிபுரம் டெல்லி பாபு (42), உணவக மேலாளர் முருங்கப்பாக்கம் ரமேஷ் (36) , கரசூர் செல்வம் (எ)
வீரமணி (32), துரைராஜ் (41), தட்டாஞ்சாவடி சுந்தர் (39) ஆகியோரும் என 15 இடைத்தரகர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களது பிடியிலிருந்த 17 வயது சிறுமி
உள்பட 9 பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்களை இடைத்தரகர்கள் ஒப்பந்த அடிப்படையில் புதுச்சேரிக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.