வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஏஐடியுசி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் பொதுச் செயலர் கே.சேதுசெல்வம் வெளியிட்ட அறிக்கை: நாட்டின் 10 வங்கிகளை இணைத்து 4- ஆகச் சுருக்குவது என்ற அரசின் முடிவை எதிர்த்து வருகிற 26, 27 -ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், நவம்பர் மத்தியில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
வங்கி ஊழியர்களின் இந்தப் போராட்டத்துக்கு ஏஐடியுசி புதுச்சேரி மாநிலக் குழு தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. சர்வதேச வங்கிகளுடன் போட்டியிடுவதற்கு ஏதுவாக, நமது நாட்டின் வங்கிகளை இணைத்து பெரிதாக்கப் போவதாக அரசு கூறுவது நகைப்பிற்குரியதாகும். அனைத்து பொதுத் துறை வங்கிகளின் மூலதனங்களை இணைத்தாலும் சர்வதேச வங்கிகளுக்கு ஈடாகாது. நமது நாட்டுக்கு தேவை விவசாயிகளை வட்டிக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற கடனுதவி அளிக்கும் கிராம வங்கிகளே.
ஏற்கெனவே இருமுறை செய்யப்பட்ட வங்கி இணைப்புகள் எந்தப் பலனையும் தரவில்லை. வாராக்கடன் அளவும் குறையவில்லை. இணைக்கப்பட்ட வங்கிகள் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. பல கிளைகள் மூடப்பட்டன. ஊழியர்களின் பணி மூப்பு நிலையில் குழப்பம் ஏற்பட்டது. தனியார் வங்கிகளுக்கு சாதகமான வர்த்தக சூழலை உருவாக்கவே வங்கி இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதை ஏஐடியுசி கடுமையாக எதிர்க்கிறது. புதுச்சேரியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்களுக்கு முழு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் ஏஐடியுசி மாநிலக் குழு தெரிவித்துக் கொள்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.