புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜோசப். இவர் கடந்த ஆண்டு ஆக.1-ஆம் தேதி புதுச்சேரி அருகே பெரியமுதலியார் சாவடியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காலாப்பட்டைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர், செல்வகுமார், பார்த்திபன் உள்ளிட்ட 12 பேரை ஆரோவில் போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து பழிக்குப் பழியாக சந்திரசேகரை கொலை செய்ய ஜோசப் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர். இதனால், சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தாலும், சந்திரசேகர் ஊருக்குள் நுழைய காலாப்பட்டு போலீஸார் தடை விதித்து இருந்தனர்.
தடைக்காலம் முடிந்த நிலையில், சந்திரசேகர், தனது மனைவி சுமலதாவுடன் மோட்டார் சைக்கிளில் திங்கள்கிழமை சென்றபோது, மாத்தூர் சாலையில் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக காலாப்பட்டைச் சேர்ந்த சுகன், ஜோசப் மகன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
இதனிடையே சுகன், கணுவாப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் நசீர், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (எ) புளியங்கொட்டை ஆகியோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தி முன் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தனர். அவர்கள் மூன்று பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சுகன் மீது 5 கொலை வழக்குகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும், ரங்கராஜ் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.