தொழிலாளியைக் கத்தியால் வெட்டிய கும்பல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி வில்லியனூர் நடேசன் நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (28). இவர், மீது கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது திருந்தி வாழும் இவர், பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கஞ்சா வியாபாரியான மருமணி குறித்து ஆல்பர்ட் வில்லியனூர் போலீஸாருக்கு தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த மருமணி தனது நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை இரவு ஆல்பர்ட்டின் வீட்டுக்குச் சென்று, தன்னைப் பற்றி ஏன் போலீஸாருக்கு தகவல் அளித்தாய் என்று கேட்டு தகராறு செய்தாராம். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால், ஆத்திரமடைந்த மருமணி நண்பர்களுடன் சேர்ந்து ஆல்பர்ட்டை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனராம்.
இதில் பலத்த காயமடைந்த ஆல்பர்ட் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஆல்பர்ட்டின் தாய் அருள்ஜோதி (49) அளித்த புகாரின் பேரில், வில்லியனூர் காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார், மருமணி, சின்ன ஐயப்பன், ராமு, சரண், திலீப் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இதில் மருமணி, சரண் ஆகிய இருவர் மீதும் கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.