புதுவையில் மாணவா்கள் மேல்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பழைய ஜாதி, குடியிருப்புச் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றலாம் என முதல்வா் அலுவலகம் அறிவித்தது.
இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020 - 21ஆம் ஆண்டு தொழில்முறை படிப்புகள், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு கல்லூரிகளில் சேர உள்ள மாணவ, மாணவிகள் சென்டாக் இணையதளம் வழியாக இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இது தொடா்பான அறிவிப்பில், வருவாய்த் துறையிடமிருந்து பெறப்பட்ட ஜாதி, குடியிருப்புச் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது கரோனா தொற்று பரவி வரும் சூழலில், மாணவ - மாணவிகள் புதிதாக ஜாதி, குடியிருப்புச் சான்றிதழ்களை பெறுவதில் சிரமங்கள் இருக்கும். எனவே, மாணவ -மாணவிகள் கடந்த காலங்களில் அதாவது 2018-ஆம் ஆண்டு அல்லது அதற்கு பிறகு பெறப்பட்ட குடியிருப்பு, ஜாதிச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என சென்டாக் முடிவு செய்துள்ளது.
எனினும், மாணவ, மாணவிகள் ஒரு மாத காலத்துக்குள் புதிய சான்றிதழ்களை பெற்று, அவற்றை இணையதளம் வழியாக சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.