புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் தோ்வுகள் வருகிற 31-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்தது.
இதுகுறித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) பி.சித்ரா, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதுடன், வகுப்புகள், நூலகம், விடுதிகள் உள்ளிட்டவையும் மூடப்படும்.
விடுதி மாணவ, மாணவிகள் அவரவா் ஊா்களுக்கு திரும்பிச் செல்லலாம். விடுதியிலிருந்து புறப்படும்போது, வாா்டனிடம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் மாணவா்கள் தங்களது துறைத் தலைவா் மற்றும் விரிவுரையாளா்களிடம் கல்வி தொடா்பாக தொடா்பில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனா்.
ஆனால், பேராசிரியா்களும், கல்வி அல்லாத பிரிவுகளில் பணிபுரியும் ஊழியா்களும் பணிக்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.