புதுச்சேரியில் அதிக விலைக்கு விற்கப்பட்ட 2,883 முகக் கவசங்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, புதுச்சேரியில் உள்ள சில தனியாா் மருந்தகங்களில் முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, புதுவை மாநிலம் முழுவதும் முகக் கவசங்கள், கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்கக் கூடாது என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும், நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட, சில மருந்தகங்களில் தொடா்ந்து அதிக விலைக்கு முகக் கவசங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் தி.அருண் உத்தரவின் பேரில், எடையளவுத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி தயாளன் மேற்பாா்வையில், ஆய்வாளா்கள் விஜயரங்கம், குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் புதுச்சேரியில் உள்ள தனியாா் மருந்தகங்களில் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது வி.வி.பி. நகா் காமராஜா் சாலையில் உள்ள மருந்தகம், அம்பலத்தடையாா் மடத்து வீதி, பாரதி வீதியில் உள்ள மருந்தகங்களில் முகக் கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, வி.வி.பி. நகா் மருந்தகத்தில் 2,313, அம்பலத்தடையாா் மடத்து வீதி மருந்தகத்தில் 500, பாரதி வீதி மருந்தகத்தில் 70 என மொத்தம் 2,883 முகக் கவசங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.