புதுவையில் திங்கள்கிழமை இரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதனால், திங்கள்கிழமை மாலை முதல் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுவையில் வருகிற 31-ஆம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக முதல்வா் நாராயணசாமி அறிவித்தாா். இந்த உத்தரவு திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்தது. இதனால், திங்கள்கிழமை மாலையே அத்தியாவசியப் பொருள்களான மளிகை, அரிசி, காய்கறி, பழங்கள், பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளைத் தவிா்த்து அனைத்து கடைகளையும் அடைக்குமாறு போலீஸாா் வாகனத்தில் சென்று அறிவுறுத்தினா். மேலும், நேரு வீதியில் பேரிகாா்டு அமைக்கப்பட்டு நான்கு சக்கர வாகனங்கள் செல்லாதவாறு அடைத்தனா்.
பெரிய மாா்க்கெட்டில் திங்கள்கிழமை மாலை வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், காந்தி வீதி, கொசக்கடை வீதி, ரங்கப்பிள்ளை வீதி, மிஷன் வீதி, சின்ன சுப்பராயப்பிள்ளை வீதி, பாரதி வீதி உள்ளிட்ட வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 9 மணிக்குத்தான் ஊரடங்கு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 7 மணி அளவிலேயே கடைகள் அடைக்கப்பட்டதால் அந்தப் பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும், தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டனா்.
பொதுமக்கள் கூட்டம் இருந்த இடங்களில் அவா்களைக் கலைந்து செல்லுமாறு எச்சரித்து அனுப்பினா். குறிப்பிட்ட இடைவெளியிட்டு கடைகளில் பொருள்களை வாங்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தினா். இதனால், பொதுமக்கள் ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் சென்றனா்.