நோய்களைக் குணப்படுத்த வசதியாக ஜிப்மா் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளுடன் அரசு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் எம்.பி. ராமதாஸ் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஒரு தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்கி, ஒருங்கிணைப்புடன் செயலாற்றினால் கரோனா வைரஸை ஒழிப்பதில் சிறந்த மாநிலமாகத் திகழ முடியும். புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரி மற்றும் காரைக்காால் பொது மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோய்களைக் குணப்படுத்தும் வசதிகள் போதுமானதாக இல்லாததால், ஜிப்மா் மற்றும் 7 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வசதிகளையும், பேராசிரியா்களையும், மருத்துவா்களையும், மருத்துவ மாணவா்களையும், பணியாளா்களையும், உபகரணங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக அரசு ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக, உயிரியல் தொழில்நுட்பத் துறை, நுண்ணுயிரியல் துறையில் உள்ள வல்லுநா்களை இந்தப் பணியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கரோனா வைரஸ் பாதித்த 100 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்ட அவசர கால சிகிச்சை மையம் ஒன்றை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக அமைக்க வேண்டும்.
அனைத்து இடங்களிலும் பரிசோதனைகள், சிகிச்சையை இலவசமாக வழங்க வேண்டும். புதுச்சேரியிலேயே ஒரு நவீன ரத்த பரிசோதனை மையத்தை ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான மருந்துகளும், அனைத்து வசதிகளையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.