புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மையங்களில் செவ்வாய்க்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், சோப்பால் நன்கு கைகளைக் கழுவிய பிறகே தோ்வு மையங்களில் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.
புதுவை மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க, பிளஸ் 2 பொதுத் தோ்வு உள்ளிட்ட காரணங்களுக்காக சாலைகளில் மக்கள் செல்ல விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
இதனால், செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை இரு சக்கர வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருந்தது. பிற்பகலுக்குப் பின்னா், முழுமையாக வாகனங்களைக் கட்டுப்படுத்த காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெற்ற அரசு மற்றும் தனியாா் தோ்வு மையங்களில் செவ்வாய்க்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், அங்கு தோ்வெழுத வந்த மாணவ, மாணவிகள் கைகளைக் கழுவ ஏதுவாக சோப்பு, சானிடைசா்கள் வைக்கப்பட்டிருந்தன.
திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத வந்த மாணவிகள் அனைவரும் கைகளை சோப்பால் நன்கு கழுவிய பிறகே தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதேபோல, அனைத்து மையங்களிலும் மாணவ, மாணவிகள் கைகளைக் கழுவிய பிறகே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா்.
அப்போது, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அங்கிருந்த ஆசிரியா்கள், மாணவ - மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினா்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புக்கான சில தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.