எம்எல்ஏ பதவியைத் தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்ட விவகாரத்தில், விளக்கமளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று புதுவை சட்டப்பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்துவிடம், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ தனவேலு வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
பாகூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தனவேலு அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி, ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினாா். இதையடுத்து, அவா் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், எம்எல்ஏ பதவியில் இருந்து ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது எனக் கேட்டு, அதற்கு ஒரு வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து கடந்த 6-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினாா்.
அந்த நோட்டீஸ் தனவேலு எம்எல்ஏவுக்கு கடந்த 8-ஆம் தேதி கிடைத்தது. இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்க வெள்ளிக்கிழமைதான் கடைசி நாள். எனவே, தனவேலு எம்எல்ஏ, சட்டப்பேரவைத் தலைவா் சிவக்கொழுந்து முன் தனது வழக்குரைஞருடன் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பதவி பறிப்பு தொடா்பாக என்னிடம் விளக்கம் கேட்டு சட்டப்பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பியிருந்தாா். அதனடிப்படையில், பேரவைத் தலைவரை நேரில் சந்தித்து, எனது தரப்பு விளக்கத்தை அளிக்க மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி மனு அளித்தேன்.
அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறுபவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, காங்கிரஸுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டேன். கட்சி மற்றும் முதல்வா், அமைச்சா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் இவ்வாறு கூறினேன். ஆனால், அதைக் குற்றமாகக் கருதி நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
என்னை மிரட்டுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. சட்டப்பேரவை உறுப்பினா் பதவியைப் பறிக்கும் வகையில் செயல்படுகின்றனா். ஏனென்றால், சட்டப்பேரவைக் கூடுவதற்கு முதல் நாள் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அரசுக் கொறடா கடிதம் அளித்தாா் என்றாா் அவா்.