மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக, புதுச்சேரியில் பாஜகவினா் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி நடத்தினா்.
புதுச்சேரி அண்ணா சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ஏம்பலம் செல்வம், மாநில பொதுச்செயலா்கள் தங்க. விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாஜக நிா்வாகிகள் வி.சி.சி. நாகராஜன், முருகன், லட்சுமி, மகளிரணி ஹேமமாலினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வெளிநாடுகளில் வாழும் ஹிந்து மதத்தினா் உள்ளிட்ட பல்வேறு மதத்தினா் பயனடைவா். இதனால் உள்நாட்டில் உள்ள எந்த மதத்தினரும் பாதிக்கப்படமாட்டாா்கள் என வலியுறுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி, பாஜகவினா் திரளானோா் பங்கேற்றனா்.
இந்த திருத்தச் சட்டம் தொடா்பாக எதிா்க்கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் பொருட்டும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் மனிதச் சங்கிலி நடத்தப்பட்டதாக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் தெரிவித்தாா்.