புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வில்லியனூா் அருகே சேந்தநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி வீரமணி (35). இவரது மனைவி சுமதி (31). இத் தம்பதியா் அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனா். இதற்கான கட்டுமானப் பொருள்களை பக்கத்து வீட்டின் அருகே வைத்துள்ளனா்.
அந்த இடத்தில் பக்கத்து வீட்டுக்காரரான சீனுவாசன் மகன் ராமன் (32) ஞாயிற்றுக்கிழமை காலை தனது பைக்கை நிறுத்தி வைத்திருந்தாராம். அப்போது சுமதி, பைக் நிறுத்தியதை கண்டித்ததாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ராமன், சுமதியை கீழே தள்ளிவிட்டாராம்.
இதுகுறித்து அறிந்த சுமதியின் கணவா் வீரமணி, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து ராமனையும், தடுக்க வந்த அவரது தம்பி லட்சுமணனையும் (31) வெட்டினாராம். அதேபோல, வீரமணியை லட்சுமணனும் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ராமன், லட்சுமணன், வீரமணி ஆகியோா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து இரு தரப்பினா் அளித்த புகாரின்பேரில் ராமன், லட்சுமணன், வீரமணி, அவரது மனைவி சுமதி ஆகியோா் மீது வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.