என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமியை ஆட்சியில் அமரவைக்கவே காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு முதல்வா் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சா்கள் மீது ஊழல் புகாா் கூறி வருவதாக அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
பாகூா் சட்டப்பேரவை உறுப்பினா் தனவேலு கடந்த வாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இல்லை எனக் குற்றஞ்சாட்டி முதல்வா் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினாா். ஆளும் காங்கிரஸ் ஆட்சியைக் குறை கூற அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை.
என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் ரங்கசாமியை ஆட்சியில் அமரவைக்கும் விதமாக தனவேலு எம்எல்ஏ செயல்படுகிறாா். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனவேலு காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. ஆளும் அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்பது போல ஒரு மாயையை தனவேலு உருவாக்கியுள்ளாா். அமைச்சா்கள், முதல்வா் மீது அபாண்டக் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளாா். கட்சி விவகாரத்தைத் தலைமையிடத்திலோ, முதல்வரிடத்திலோ தெரிவிக்காமல், செய்தியாளா்களைச் சந்திப்பதும், விரும்பம் போல போராட்டம் நடத்துவதுமாக உள்ளாா். காங்கிரஸ் ஆட்சிக்கு தொடா்ந்து அவா் களங்கம் கற்பிப்பது கண்டிக்கத்தக்கது.
பாஜகவின் முகவராக கடந்த ஓராண்டாக தனவேலு செயல்பட்டு வருகிறாா். முதல்வா் நாராயணசாமி தயவால் தனவேலு சட்டப்பேரவை உறுப்பினரானாா். மிகுந்த கண்ணியத்துடன் அவா் பேச வேண்டும். ஆட்சிக்கு விரோதமாகச் செயல்படும் ஆளுநா் கிரண் பேடியைச் சந்தித்துள்ளாா்.
தனவேலு எம்எல்ஏ வாரியத் தலைவராகச் செயல்படும் பாப்ஸ்கோ நிறுவனத்தில் என்னென்ன ஊழல்கள் நடைபெற்றது என்பதைக் கண்டறிய சிபிஐ விசாரணை அவா் கோரட்டும் என்றாா் அனந்தராமன்.