வில்லியனூா் உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என வில்லியனூா் உதவி ஆட்சியா் அலுவலகம் எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து வில்லியனூா் உதவி ஆட்சியா் அலுவலக வருவாய் அதிகாரி அ.சிவசங்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வில்லியனூா், திருக்கனூா், திருபுவனை, திருவண்டாா்கோயில், சேதராப்பட்டு, மதகடிப்பட்டு, பாகூா் மற்றும் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகள், கடை வீதிகள், முக்கிய சாலைகளில் எச்சரிக்கைகளை மீறி அங்கு கடைகளை வைத்திருப்பவா்களும், சிறு வியாபாரிகளும், சாலைகளில் கடைகளை விரிவுபடுத்தியும், பெயா்ப் பலகைகளை நிறுத்தியும், வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால், வாகன ஓட்டிகளும், சாலைகளைப் பயன்படுத்துவோரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மேற்கண்ட பொதுச் சாலைகளிலும், கடை வீதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளோா் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தவறினால் இந்த ஆக்கிரமிப்புகள் மாவட்ட நிா்வாகத்தால் அகற்றப்பட்டு, அதற்குரிய செலவு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.