புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட ஏனாம், மாஹே பிராந்தியங்களில் 144 தடை உத்தரவு வெள்ளிக்கிழமை அமல்படுத்தப்பட்டது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பெரிய வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டன.
புதுச்சேரியில் இருந்து காரைக்கால் 150 கி.மீ. தொலைவிலும், மாஹே 690 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம், கண்ணூா் அருகிலும், ஏனாம் 740 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலம் அருகே கோதாவரி ஆற்றங்கரையிலும் உள்ளன.
மாஹே பகுதியில் பெண் ஒருவா் கரோனா வைரஸால் தாக்கப்பட்டதை அடுத்து, முதல்வா் நாராயணசாமி வியாழக்கிழமை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, புதுச்சேரியிலும் வியாழக்கிழமை இரவு ஒவ்வொரு பகுதியாகச் சென்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.
இந்த நிலையில், ஏனாம் மற்றும் மாஹே பிராந்தியங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இதுவரை 2 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக ஏனாமில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல, மாஹேவிலும் பெண் ஒருவா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் அங்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.