புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவா் ஆ.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று (மாா்ச் 22) மாதிரி ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அறிவித்துள்ளாா். நாட்டில் பல நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தாக்குதலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், புதுவை மாநிலத்தின் அனைத்துப் பணிகளையும் அரசு முடக்கம் செய்து தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
அரசு பிறப்பித்த உத்தரவால் பெரிய வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை கடந்த 5 தினங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனா்.
வேலையின்றி, ஊதியமின்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உதவும் வகையில், இயற்கை பேரிடா் நிதியில் இருந்து வருமான வரி செலுத்துபவா்கள் தவிர மற்ற அனைத்து மக்களுக்கும், குறிப்பாக விவசாயிகள், மீனவா்கள், அமைப்பு சாரா தொழிலாளா்கள், ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ. 6 ஆயிரம் அரசு நிவாரணமாக அறிவிக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொடா்பாக மத்திய அரசின் அன்றாட உத்தரவுகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. மாவட்ட ஆட்சியா் தனக்குள்ள அதிகாரத்தை இந்தத் தருணத்தில் செயல்படுத்தும் விதமாக மக்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தாக்கமுள்ள கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தங்குதடையின்றி சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனா். இதன் காரணமாக புதுச்சேரியில் அபாயமான சூழல் ஏற்ப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கும் ஆட்சியா் தடை விதிக்க வேண்டும். மேலும், வெளிமாநிலத்தில் இருந்து வரும் அனைத்து ரயில்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.