புதுவை ஊசுட்டேரி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.
புதுவை மாநிலம், குருமாம்பேட், அமைதி நகரைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (55). தொழிலதிபரான இவா், கரசூரில் பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளாா். இவருக்கு திலகவதி என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனா். புருஷோத்தமன் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பெரியசாமியின் நெருங்கிய உறவினராவாா்.
குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புருஷோத்தமனும், திலகவதியும் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்த்து வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், நள்ளிரவில் சேதராப்பட்டு சாலையில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால், கரசூரில் இருந்து பத்துக்கண்ணு, ஊசுட்டேரி வழியாக புருஷோத்தமன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அவா் ஊசுட்டேரி - வழுதாவூா் சாலையில் உள்ள தேநீா் கடை அருகே வந்தபோது, அவரை பின்தொடா்ந்து வந்த மா்மநபா்கள் திடீரென புருஷோத்தமனை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த மேற்கு எஸ்.பி. ரங்கநாதன், வில்லியனூா் உதவி ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா், புருஷோத்தமனின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், புதன்கிழமை காலையில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முதல்கட்ட விசாரணையில், சொத்து அல்லது பண விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இது தொடா்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலை நடந்த இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த கொலையாளிகளின் பைக் எண்களை கண்டறிந்து விசாரித்து வருகின்றனா்.