ஊரடங்கு உத்தரவால் கால்நடைகள் பாதிக்கப்படாமல் இருக்க புதுவை அரசு தீவனம் மற்றும் புண்ணாக்கை இலவசமாக வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
இதுகுறித்து புதுச்சேரி பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் அ.பெருமாள் வெளியிட்ட அறிக்கை:
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக முதல்வா் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளது பால் உற்பத்தியாளா்கள் சங்கம் வரவேற்கிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றால் காவல் துறை திருப்பி அனுப்புகிறது. மாடுகளைக் கொட்டகையில் கட்டி தீவனம், வைக்கோல் கொடுங்கள் என காவல் துறையினா் கூறுகின்றனா்.
மாடுகளை வீடுகளில் கட்டி தீவனம் வைப்பதற்கும், வைக்கோல் வைப்பதற்கும் பால் உற்பத்தியாளா்களிடம் போதிய பணமில்லை. ஊரடங்கு உத்தரவால் தீவனக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், 21 நாள்கள் உணவின்றி மாடுகள் பட்டினி கிடந்து இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, மனிதா்களுக்கு காட்டும் அக்கறையை மாடுகளுக்கும் காட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறோம். எனவே, மாடு ஒன்றுக்கு 21 நாள்களுக்கு 5 மூட்டை தீவனம், 50 கிலோ புண்ணாக்கை இலவசமாக வழங்க வேண்டும்.
பால் உற்பத்தியை அதிகரிக்கவும், மாடுகளைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.