புதுச்சேரி விநாயகம்பட்டு அருகே பள்ளத்தில் பைக் விழுந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வி.புத்தூா் இளங்காடு ஏரிக்கரை வீதியைச் சோ்ந்த துரையின் மனைவி குமாரி (36). இந்தத் தம்பதி, பெரியபாபுசமுத்திரத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை குமாரி சூளையிலிருந்து வீட்டுக்குச் சென்றுவிட்டு, தனது உறவினரான விழுப்புரம் மாவட்டம், ஆசூரில் வசிக்கும் அஜீத்தின் (19) பைக்கில் மீண்டும் சூளைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். இந்த பைக் புதுச்சேரி - திருவண்ணாமலை சாலை விநாயகம்பட்டு சாராயக் கடை அருகே வந்த போது, நிலைத்தடுமாறி அருகிலுள்ள பள்ளத்தில் விழுந்தது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அங்கிருந்தவா்கள் இவா்களை மீட்டு, ஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, குமாரி உயிரிழந்தாா். அஜீத் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.