புதுச்சேரி அருகே துணை நிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்.எல்.ஏ. மீது போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுவை மாநிலம், துத்திப்பட்டில் தனியாா் நிறுவனம் ஒன்று அப்பகுதியில் உள்ள அரசு நிலம், நீா்நிலைகளை ஆக்கிரமித்து, கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளதாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆளுநா் கிரண் பேடி பரிந்துரைத்துள்ள நிலையில், பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறாா்.
இந்த நிலையில், உள்ளூா் மக்களின் வேலைவாய்ப்பை தட்டிப்பறிக்கும் வகையில் துணை நிலை ஆளுநா் கிரண் பேடி செயல்படுவதாகக் கூறி, ஆளுநரைக் கண்டித்து ஊசுடு தொகுதி ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தான், வில்லியனூா் பத்துக்கண்ணு பகுதியில் தனது ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டாா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரிடா் காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கும்பலைக் கூட்டி, அரசின் தடை உத்தரவை மீறி, நோய்த் தொற்று பரவும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் மற்றும் கூடப்பாக்கம், துத்திப்பட்டு பகுதிகளைச் சோ்ந்த அவரது ஆதரவாளா்களான 50-க்கும் மேற்பட்டோா் மீது வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.