ஊதியம் வழங்கக் கோரி, புதுச்சேரி நகராட்சி ஆணையா் அலுவலக வளாகத்தில் நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் கரோனா காலகட்டத்தில் தீவிர பணியாற்றி வருகின்றனா். கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்வது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளில் அவா்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா். ஆனால், அவா்களுக்கு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், 2 மாதங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை கம்பன் கலையரங்கத்தில் உள்ள நகராட்சி ஆணையா் அலுவலக வளாகத்தில் நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி ஊழியா்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஆனந்த கணபதி தலைமை வகித்தாா். இதில், திரளான ஊழியா்கள் கலந்துகொண்டனா்.