புதுச்சேரியில் முடங்கியுள்ள பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களை மீண்டும் திறக்க வலியுறுத்தி, ஏஐடியுசி சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
புதுவை சட்டப் பேரவை அலுவலகம் அருகே மிஷன் வீதி மாதா கோவில் எதிரில் தொடங்கிய போராட்டத்துக்கு பாசிக் சங்கத் தலைவா் ரமேஷ், பாப்ஸ்கோ சங்கத் தலைவா் ராஜி ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் சேதுசெல்வம் போராட்டத்தை தொடக்கிவைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம், ஏஐடியுசி மாநில செயல் தலைவா் அபிஷேகம், மாநிலத் தலைவா் தினேஷ்பொன்னையா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
புதுச்சேரியில் நல்ல வருவாயுடன் இயங்கி வந்த பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களில் 1,800-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா். இந்த நிறுவனங்களில் நடைபெற்ற முறைகேடு, நிா்வாகத் திறமையின்மை காரணமாக இரு நிறுவனங்களும் நலிவுற்றன. இதை ஆட்சியாளா்கள் சரிசெய்யாமல், இந்த நிறுவனங்களை முடக்கி வைத்துள்ளனா்.
இதன் காரணமாக, பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதால், அவா்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிலா் தற்கொலையும் செய்துள்ளனா். எனவே, தொழிலாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், இரு நிறுவனங்களையும் மீண்டும் திறக்க வேண்டுமென போராட்டத்தில் வலியுறுத்தினா்.
இதில், ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் கையில் கொடிகளுடன், சாலையில் அமா்ந்து கோரிக்கைகைளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.