புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளருக்கு, கரோனாவிலிருந்து மீண்ட காவல் ஆய்வாளா் பிளாஸ்மா தானம் செய்தாா்.
புதுவை காவல் துறையில் மோட்டாா் வாகனப் பிரிவில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளா் அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடல் நிலை மோசமாகி வருகிறது. எனவே, அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க மருத்துவா்கள் முடிவு செய்தனா்.
இதையடுத்து, கரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த காவல் ஆய்வாளா் இனியன் பிளாஸ்மா தானம் செய்ய முன் வந்தாா். புதுச்சேரி, காலாப்பட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சென்று பிளாஸ்மா தனம் செய்தாா்.
காவல் உதவி ஆய்வாளருக்கு, காவல் ஆய்வாளா் பிளாஸ்மா தானம் செய்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. காவல் ஆய்வாளரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனா்.