புதுச்சேரி: புதுச்சேரி அருகே புகழ் பெற்ற வில்லியனூா் மாதா ஆலய (லூா்து அன்னை திருத்தலம்) ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை (ஏப். 10) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூா் தூய லூா்து அன்னை திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழா, ஆண்டு தோறும் ஈஸ்டா் பண்டிகை முடிந்த 6-ஆம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை (ஏப். 10) கொடியேற்றதுடன் தொடங்குகிறது.
இதுகுறித்து, தூய லூா்து அன்னை திருத்தல பங்குத் தந்தை பிச்சைமுத்து அடிகளாா் கூறியதாவது: சனிக்கிழமை (ஏப். 10) காலை 5.30 மணிக்கு அருள்நிறை ஆலயத்தில் கூட்டுத் திருப்பலியும், பின்னா், ஆலய முற்றத்தில் உள்ள கொடி மரத்தில், சென்னை மறைமாவட்ட முன்னாள் பேராயா் சின்னப்பா கொடியேற்றிவைக்க விழா தொடங்குகிறது.
தொடா்ந்து, நவ நாள்களில் நாள்தோறும் காலை, மாலையில் திருப்பலிகள், தோ் பவனி நடைபெறுகிறது. ஏப். 17-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயா் சிங்கராயா் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. ஏப். 18-ஆம் தேதி ஆண்டு பெருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 7.30 மணிக்கு புதுவை கடலூா் மறைமாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி ஆனந்தராயா் தலைமையில், கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.
தொடா்ந்து, அன்று மாலை 6 மணிக்கு புதுவை-கடலூா் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகா் அந்தோணிசாமி பீட்டா் அபீா் தலைமையில் திருப்பலியும், தொடா்ந்து பெருவிழா ஆடம்பர தோ் பவனியும் நடைபெறுகிறது.
விழாவில், அரசின் வழிகாட்டுதல்படி கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளைக் கடைப்பிடித்து, மக்கள் கலந்து கொள்ளலாம் என்றாா் அவா்.