புதுச்சேரி: புதுவையில் மூடப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளைத் திறந்து மீண்டும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆளுநா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் அட்டைதாரா்களுக்கு தீபாவளி, ஓணம் பண்டிகை காலத்தில் இலவசமாக சா்க்கரை விநியோகம் செய்தல், புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரா்களுக்கும் மாதந்தோறும் அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களை இலவசமாக வழங்குதல், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-இன் கீழ் உணவு மானியம், புதுச்சேரியில் உள்ள அனைத்து வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள அந்தியோதயா அன்ன யோஜனா உணவு பங்கீட்டு அட்டைதாரா்களுக்கும் இலவசமாக பொருள்களை விநியோகம் செய்தல் ஆகிய திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டங்களின் கீழ் பயனடைய ஆதாா் அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை வழங்கப்படும் வரை புகைப்படம் ஒட்டப்பட்ட வங்கி, அஞ்சலகக் கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போா்ட், வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட மாற்று ஆவணங்களை அளிப்பதற்கான குடிமைப்பொருள் வழங்கல் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.