புதுச்சேரியில் சாலையில் கிடந்த ஏடிஎம் இயந்திரத்தின் உதிரிபாகத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு, வினோபா வீதி, பள்ளிவாசல் தெருவில் திங்கள்கிழமை ஏடிஎம் இயந்திரத்தின் பெரியளவிலான உதிரிபாகம் ஒன்று கிடந்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் உருளையன்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், தெருவில் கிடந்த ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்படும் 18 கிலோ எடையுள்ள முக்கியமான உதிரிபாகத்தை கைப்பற்றி, சந்தேகப் பொருள் (102 பிரிவு) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அதை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
யாரேனும் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு உதிரிபாகத்தை அங்கு வீசிவிட்டு சென்றனரா அல்லது வங்கி சாா்பில் பழைய ஏடிஎம் இயந்திரத்தை இரும்புக் கடைக்கு கொண்டு சென்றதில் பாரம் தாங்காமல் கீழே விழுந்ததா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.