தீபாவளி இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்காக, ஈரோட்டிலிருந்து புதுச்சேரிக்கு லாரிகளில் அரிசி மூட்டைகள் வந்த நிலையில், அவற்றில் தரமற்ற அரிசி மூட்டைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திருப்பி அனுப்பினா்.
புதுவையில் மொத்தமுள்ள 3.65 லட்சம் குடும்ப அட்டைதாரா்களில் மாஹே பிராந்தியம் நீங்கலாக மீதமுள்ள 3.57 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தீபாவளி இலவச அரிசி, சா்க்கரை வழங்கப்படவுள்ளது. இதற்காக ஒப்பந்த நிறுவனம் மூலம் ஈரோட்டிலிருந்து புதுச்சேரிக்கு அரிசி மூட்டைகள் கடந்த இரு தினங்களாக 13 லாரிகளில் வந்தன.
அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 6 லாரிகளில் வந்த அரிசி மூட்டைகள் போதிய தரமில்லாமல் இருந்ததால், அவற்றை திருப்பி அனுப்பிவைத்தனா். தரமான அரிசி மூட்டைகள் மட்டும் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை தற்போதைக்கு தாயராக உள்ள 325 நியாயவிலைக் கடைகள் மூலம் உடனுக்குடன் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.