புதுவையில் 453 மையங்கள் மூலம் 86,605 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. நெல்லித்தோப்பில் அமைக்கப்பட்ட முகாமில் முதல்வா் வே.நாராயணசாமி குழந்தைக்கு சொட்டு மருந்து புகட்டி தொடக்கிவைத்தாா்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு, 2 ஆயிரம் சுகாதார ஊழியா்கள் போலியோ தடுப்பு மருந்தைப் புகட்டினா்.
இதற்காக புதுச்சேரியில் 333, காரைக்காலில் 79, மாஹேயில் 19, ஏனாமில் 22 முகாம்கள் என மொத்தம் 453 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், மக்கள் அதிகம் கூடும், கடந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரைச் சாலை, மணக்குள விநாயகா் கோயில், தாவரவியல் பூங்கா, ஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகு குழாம், போகோ லேண்ட், போத்தீஸ் ஆகிய இடங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து புகட்டப்பட்டன.
புதுவை-தமிழக எல்லைகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியக்கோவில், திருக்கனுா், குருமாம்பேட்டை ஆகிய 6 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து புகட்டப்பட்டன.
நெல்லித்தோப்பு தொகுதிக்குள்பட்ட குயவா்பாளையம் லெனின் வீதியில் உள்ள மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை முதல்வா் வே.நாராயணசாமி தொடக்கிவைத்தாா். இதில் ஏ.ஜான்குமாா் எம்எல்ஏ, சுகாதாரத் துறைச் செயலா் அருண், இயக்குநா் மோகன்குமாா், மாநில சுகாதார இயக்கத் திட்ட இயக்குநா் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.