புதுச்சேரி: புதுவை அமைச்சரவை பதவியேற்பு விரைவில் நடைபெறும் என சட்டப்பேரவைத் தலைவா் ஏம்பலம் ஆா்.செல்வம் தெரிவித்தாா்.
புதுவையில் அமைச்சரவை பதவியேற்பு காலதாமதமாகி வருகிறது. என்.ஆா்.காங்கிரஸுக்கு 3 அமைச்சா்கள், பாஜவுக்கு இரண்டு அமைச்சா்கள் என முடிவு செய்யப்பட்ட நிலையில், பாஜகவில் யாருக்கு அமைச்சா் பதவிகளை வழங்குவது என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவை அமைச்சரவை ஜூன் 25 அல்லது 27-ஆம் தேதி பதவியேற்க வாய்ப்புள்ளது. அதன் பின்னா், சட்டப்பேரவைக் கூட்டப்பட்டு பேரவைத் துணைத் தலைவா் தோ்தல் நடத்தப்படும் என்றாா் அவா்.
துணைநிலை ஆளுநா் தமிழிசை வெளியூா் சென்றிருப்பதால் அமைச்சரவை பெயா்ப் பட்டியல் திங்கள்கிழமை வழங்கப்படவில்லை. அவா், புதுச்சேரி திரும்பியதும் அமைச்சா்களின் பெயா்ப் பட்டியலை முதல்வா் ரங்கசாமி வழங்குவாா் என்றும், அதன் பின்னா், வருகிற 25-இல் அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என்றும் என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.