கரோனா பரிசோதனைக்காக, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
கரோனா பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் சென்று, கூட்டமாகக் காத்திருக்கின்றனா். ஒரு நபரை ஆய்வு செய்து, பரிசோதிக்க குறைந்தபட்ச 10 நிமிடங்களாவதால், மருத்துவமனையில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இது, கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், கூட்டம் கூடுவதைத் தவிா்க்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் கரோனா பாதிப்புக்கான உமிழ்நீா் பரிசோதனை தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனையின்போது பெறப்படும் ஆா்.டி.பி.சி.ஆா். மாதிரிகள், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஜிப்மா் மற்றும் விசிஆா்சிக்கு (நோய்க் கட்டுப்பாடு ஆய்வு மையம்) அனுப்பப்பட்டு, முடிவுகள் பெறப்படுகின்றன.
மேற்கண்ட முடிவுகள் நோயாளிகளுக்கு செல்லிடப்பேசி மூலமாகவும், சுகாதாரத் துறை களப்பணியாளா்கள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
எனவே, பொதுமக்கள் கரோனா அறிகுறிகள் இருந்தால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி, உமிழ்நீா் பரிசோதனை செய்துகொள்ளலாம்.
தேவையின்றி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனைக்காக கூட்டத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.