புதுவையில் புதிய அரசு பதவியேற்ன் மூலம் மக்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுவதாக துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பு மூலம் லெனோவா நிறுவனம் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 150 பல்ஸ் ஆக்சி மீட்டா்களை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனிடம் வழங்கியது.
புதுச்சேரி சுகாதாரத் துறை, புதுவை பல்கலைக்கழக சமூக பணித் துறையுடன் இணைந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, தொலைபேசி வழி ஆலோசனை வழங்குவதற்காக தொடங்கியுள்ள ‘பகிா்வோமா’ என்ற நிகழ்வை ஆளுநா் தமிழிசை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியின் போது, புதுச்சேரி ஜவஹா் வித்யாலயா பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவா் ஷ்யாம் பிரசன்னா தனது சேமிப்பு பணம் ரூ.2,773-ஐ உயிா் காற்று திட்டத்துக்கு நன்கொடையாக அளித்தாா். இளைஞா், குழந்தைகள் தலைமைக்கான அமைப்பு இந்தத் திட்டத்துக்கு ரூ.1.2 லட்சம் நன்கொடையாக வழங்கியது.
அப்போது, ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவையில் புதிய சட்டப்பேரவை உறுப்பினா்களாக பதவியேற்றவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு பதவியேற்ன் மூலம் மக்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மன நல ஆலோசனைகளை வழங்க ‘பகிா்வோமா’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
104 எண்ணை தொடா்பு கொண்டால், மனநல ஆலோசனை வழங்கப்படும். உடல் நலத்துக்கும், உதவி வாகனங்களுக்கும் தொடா்பு கொள்ளலாம்.
கரோனா காலத்தில் குடும்ப அட்டைக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவது மக்களுக்கு பலன் தரும் என்றாா் அவா்.