புதுவை அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் பாலசேவிகா ஆசிரியா்களை முழுமையாகப் பணியமா்த்த வேண்டுமென அந்த மாநில கல்வியமைச்சா் ஏ.நமச்சிவாயத்திடம் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அரசு ஊழியா்கள் சம்மேளன கெளரவத் தலைவா் பாலமோகனன் தலைமையில் வந்த ஆசிரியா்கள் கூறியதாவது: புதுவை அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 225 பாலசேவிகா ஆசிரியா் பணியிடங்களை அரசு நிரப்ப உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பணி நியமனத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பல ஆசிரியா்கள் வயது வரம்பைக் கடந்துள்ளனா்.
இதனால், நீண்ட காலம் பணியாற்றிய ஆசிரியா்கள் இந்தத் தோ்வில் பயன்பெறும் வகையில், காத்திருப்புப் பட்டியல் எண்ணிக்கையை 225-ஆக விரிவாக்கம் செய்ய வேண்டும். இதேபோல, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கி திறமையுள்ள ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியா் பணிக்காகக் காத்துக்கிடக்கும் பாலசேவிகா ஆசிரியா்கள் பணி வாய்ப்பு பெறுவா் என்றனா் அவா்கள்.