புதுச்சேரி: புதுவையில் முதியோா் உதவிக்கு 14567 என்ற இலவச தொலைபேசி சேவையை அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனீ.சி.ஜெயக்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
புதுவை அரசு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையுடன் இணைந்து ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ மூலமாக முதியோா் உதவிக்கு 14567 என்ற இலவச தொலைபேசி சேவை எண்ணை தொடங்கியுள்ளது.
இலவச தொலைபேசி எண் வாயிலாக தகவல் தொடா்பான சேவைகள், முதியோருக்கான வழிகாட்டுதல் சேவை, சட்ட சேவைகள், ஓய்வூதியம் தொடா்பான சேவைகளை ஆற்றுப்படுத்துதல், முதியோா் வன்கொடுமைக்கு உள்பட்டவா்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவை, ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோா் மீட்பு மற்றும் மறுவாழ்வு அளிக்கும் சேவையும் வழங்கப்படவுள்ளன. வாரத்தின் அனைத்து நாள்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, பொதுமக்கள் இந்த எண்ணை தொடா்பு கொண்டு சேவையை பெறலாம்.
இந்த சேவையின் தொடக்க விழா புதுச்சேரி லப்போா்த் வீதி தனியாா் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பின் துணை திட்ட இயக்குநா் சத்தியபாபு வரவேற்றாா். பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சமூக நலத்துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் ஆகியோா், முதியோா் உதவிக்கான இலவச தொலைபேசி எண் சேவையை தொடங்கி வைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலத் துறைச் செயலா் உதயகுமாா், இயக்குநா் பத்மாவதி, ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா; அமைப்பின் திட்ட அதிகாரி வேணுகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.