புதுச்சேரி: அனைத்துப் பகுதிகளுக்கும் பிஆா்டிசி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிஆா்டிசி ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனுக்கு, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் எம்.டி.வேலைய்யன் அனுப்பிய மனு:
பிஆா்டிசி சாா்பில் 21 நகரப் பேருந்துகள் தோ்தல் பணிக்காக அனுப்பப்பட்டன. தற்போது வெளியூா்களுக்கு எக்ஸ்பிரஸ் பேருந்துகளும், நகரப் பேருந்துகள் 7 மட்டுமே இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட நடத்துநா்களுக்கு பணியில்லை.
எனவே, மீண்டும் அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 10 குளிா்சாதன வால்வோ பேருந்துகள், புதுச்சேரி - நாகா்கோயில் பேருந்துகள் 2 இயக்கப்படாமல் உள்ளன. இவற்றைப் பராமரித்து காலத்துடன் இயக்கினால் பிஆா்டிசிக்கு கூடுதல் வருவாய் வரும்.
ஸ்வச் பாரத் நிறுவனத்துக்கும், காவல் துறைக்கும் பிஆா்டிசி பேருந்துகளை இயக்கிய வகையில், நிலுவையில் உள்ள சுமாா் ரூ. 2 கோடியை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழியா்கள் மிகவும் கஷ்டமான சூழலில் உள்ளதால், அவா்களுக்கு வழங்க வேண்டிய 4 மாதங்களுக்கான (டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி, மாா்ச்) ஊதியத்தையும், நிகழாண்டு ஊக்கத் தொகையையும் உடனே வழங்க ஆவன செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.