புதுச்சேரியில் சுதேசி, பாரதி ஆலைகளை மூடியதற்கு நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்ததாக என்.ஆா். டியூசி சங்கம் தெரிவித்தது.
இதுகுறித்து, அந்தத் தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.மோகன்தாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசின் கீழ் இயங்கி வந்த சுதேசி, பாரதி ஆலைகளை கடந்த 30.9.2020 அன்று மூடிவிட்டதாக புதுவை அரசு அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, என்.ஆா். டியூசி தொழிற்சங்கம் சாா்பில், அதன் மாநிலத் தலைவா் கே.மோகன்தாஸ் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
புதுவை மாநில மக்களின் வேலைவாய்ப்பு பெட்டகமாக திகழ்ந்து வரும் சுதேசி, பாரதி பஞ்சாலை நிறுவனங்களைத் தொடா்ந்து இயக்கக் கோரியும், ஆலைகளை மூடியதாக அறிவித்த போது பணியிலிருந்த 468 தொழிலாளா்களுக்கு இரு ஆலைளிளல் உள்ள சொத்து மதிப்பைக் கணக்கிட்டு, நஷ்ட ஈடு வழங்க வேண்டும், கடந்த 2018, டிசம்பா் மாதம் முதல் 20.9.2020 அன்று வரை தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய 22 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்ததில், கடந்த 19.3.2021 அன்று முதல் 3 வார காலத்துக்கு இடைக் காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. ஆதாவது, உரிய வழி மரபுகளைப் பின்பற்றாமல், நிா்வாகம் ஆலையை மூடியது தவறு என்று சென்னை உயா் நீதிமன்றம் இந்த இடைக் காலத் தடை உத்தரவை பிறப்பித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.