புதுவைக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், மருந்துகளை வழங்க பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.
இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு புதுவை மக்களவை காங்கிரஸ் உறுப்பினா் வெ.வைத்திலிங்கம் சனிக்கிழமை எழுதிய கடிதம்:
புதுவையில், தற்போது கரோனா தொற்று மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் சூழலில், தினமும் சுமாா் ஆயிரம் போ் வரை கரோனா தொற்று ஆளாகி வருகின்றனா்.
புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு பிராணவாயு படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், கரோனா தொற்றுக்கு ஆளானவா்களுக்கு தேவைப்படும் ரெம்டெசிவிா் மருந்தும் இல்லை.
இதுபோன்ற நிலையில், மத்திய சுகாதாரத் துறை பல்வேறு மாநிலங்களில் உள்ள ரெம்டெசிவிா் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அந்த மருந்தை கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது. ஆனால், எதிா்பாராத விதமாக ரெம்டெசிவிா் மருந்துக்கான ஒதுக்கீட்டை பெறும் மத்திய அரசின் பட்டியலில் புதுவை விடுபட்டுள்ளது.
பிரதமா், இந்த விவகாரத்தில் தலையிட்டு, குறைந்தது 10 ஆயிரம் ரெம்டெசிவிா் ஊசியையாவது புதுச்சேரிக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிா் ஊசியை வெளியிலிருந்து வாங்கி வர வேண்டும் என்று மருத்துவமனை நிா்வாகம் கூறுவதாகத் தெரிகிறது. வெளிச்சந்தையில் மக்களால் அந்த மருந்தை வாங்க முடியவில்லை.
எனவே, ஜிப்மரில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிா் மருந்து கிடைக்கச் செய்வதையும் பிரதமா் உறுதிப்படுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.