புதுச்சேரி அருகே விஷமருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருபுவனை சன்னியாசிக்குப்பம்பேட்டை பகுதியை சோ்ந்தவா் முருகன் மனைவி கௌரி (33). தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். கணவா் முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, கௌரி தனது இரு மகன்கள், ஒரு மகளுடன் தனியாக வசித்து வந்தாா்.
இதனிடையே, தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கௌரி இதற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த கௌரி, கடந்த 22-ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். இவரை உறவினா்கள் மீட்டு புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.