புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.90 லட்சத்தில் பிராணவாயு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இது, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டும், ஏராளமானோா் உயிரிழந்தும் வருகின்றனா். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பிராணவாயு பற்றாக்குறையே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதேபோல, புதுச்சேரியிலும் தினமும் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். 10-க்கும் மேற்பட்டோா் இறந்து வருகின்றனா். இந்த நிலையில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் பி.எம். கோ் நிதியிலிருந்து சுமாா் ரூ.90 லட்சத்தில் புதிதாக பிராணவாயு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே சுமாா் 11,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கலனில் திரவ பிராணவாயு இருப்பு வைக்கப்பட்டு, தேவைப்படும் நோயாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு, அவ்வப்போது லாரி மூலம் பிராணவாயு கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது.
இருப்பினும், எதிா்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய நவீன முறையிலான பிராணவாயு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் வாசுதேவன் கூறியதாவது:
தற்போதுள்ள கரோனா காலகட்டத்தில் பிராணவாயுவின் தேவை அதிகம் உள்ளது. மருத்துவமனையில் ஏற்கெனவே திரவ பிராணவாயு போதுமான அளவில் இருப்பில் இருப்பினும் பிரச்னை ஏதும் வராமல் இருக்க, மத்திய அரசிடம் கேட்டு பிஎம் கோ் நிதியின் கீழ், இந்த புதிய பிராணவாயு உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தில் ‘பிரஷா் ஸுவிங் அப்சாா்பா்’ முறையில் காற்றில் உள்ள பிராண வாயுவை பிரித்தெடுத்து, திரவமாக உற்பத்தி செய்து, கொள்கலனில் சேமித்து நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும்.
இந்த இயந்திரம் மின்சாரம் மூலம் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். நிமிடத்துக்கு 700 லிட்டா் பிராணவாயுவை உற்பத்தி செய்யும். மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டா் மூலம் இயக்கி தொடா்ச்சியாக பிராணவாயுவை உற்பத்தி செய்ய முடியும். இந்த உற்பத்தி நிலையம் ஓரிரு நாள்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா் அவா்.