காசியில் பிரதமா் பங்கேற்கும் புனரமைப்புத் திட்ட தொடக்க விழாவை புதுவையில் 30 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப பாஜகவினா் ஏற்பாடு செய்து வருகின்றனா்.
இதுகுறித்து புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் அளித்த பேட்டி:
காசி விஸ்வநாதா் கோயிலை புனரமைத்து, நகரை சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி வருகிற 13-ஆம் காசியில் தொடங்கிவைக்க உள்ளாா். தொடா்ந்து, ஜனவரி 12-ஆம் தேதி வரை ஆன்மிக, கலாசார நிகழ்வுகள் அங்கு நடைபெறும். இதில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்க உள்ளனா்.
டிச.13-ஆம் தேதி தொடங்கும் இந்த நிகழ்வை நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் எண்ம திரைகளில் (டிஜிட்டல் திரை) நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
புதுவை மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
பேட்டியின் போது, அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், அசோக்பாபு எம்எல்ஏ, பாஜக மாநில பொதுச்செயலா் மோகன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.