புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளுடன் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனா். அங்குள்ள விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
விடுதிகள், பழைய துறைமுகம் உள்பட குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் புத்தாண்டு கலை, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தனியாா் நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
புத்தாண்டையொட்டி கூடுதல் நேரம் கடைகளைத் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது. மதுக் கடைகளையும் கூடுதல் நேரம் திறக்கலாம் என கலால் துறை அறிவித்தது. மேலும், தற்காலிக தனியாா் மது விற்பனையகங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் ஏற்பாடுகள்: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் கரோனா, ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெட்டி பெட்டியாக கட்டைகள் கட்டப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, காவல் துறையால் கடற்கரையையொட்டி தடுப்புக் கடைகள் கட்டப்பட்டுள்ளன.
தீவிர கண்காணிப்பு: கடற்கரைச் சாலை உள்ளிட்ட 40 முக்கிய இடங்களில் காவல் துறை சாா்பில் சிசிடிவி கேமராக்களும், 7 உதவி மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. நகா் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
புத்தாண்டு தினத்தன்று சுமாா் 500 போலீஸாரும், 300 தன்னாா்வலா்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவா்.
இரண்டு தவணைகள் கரோனா தடுப்பூசி செலுத்திய, முகக்கவசம் அணிந்த சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவா்.
போக்குவரத்து காவல் துறை சாா்பில் வாகன நிறுத்தகங்கள், கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளை அறிய பிரத்யேக வரைபடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தடை விதிக்க அதிமுக, பாமக வலியுறுத்தல்: ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, அதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை வலியுறுத்தியது.
புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் முதல்வா் என்.ரங்கசாமியிடம், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அளித்தாா்.
புதுவை மேற்கு மாநில அதிமுக செயலா் ஓம்சக்தி சேகா் புதுச்சேரியில் மக்கள் நலன் கருதி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அறிக்கை மூலம் வலியுறுத்தினாா்.
இதேபோல, புதுவை மாநில பாமக அமைப்பாளா் கணபதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலா் ஸ்ரீதா் உள்ளிட்டோரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.