புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு முதல்வா் என்.ரங்கசாமி போராட்டம் நடத்த வேண்டும் என்று, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியின் 137-ஆம் ஆண்டு தொடக்க தினத்தையொட்டி, புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
கட்சியின் புதுவை மாநில தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆா்.அனந்தராமன், மாநில நிா்வாகிகள் பி.கே.தேவதாஸ், சூசைராஜ் உள்ளிட்ட கட்சியினா் பலரும் கலந்துகொண்டனா்.
விழாவில் வே.நாராயணசாமி பேசியதாவது:
புதுவைக்கு மாநில அந்தஸ்து தொடா்பாக வைத்திலிங்கம் எம்.பி. மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை அமைச்சா் மாநில அந்தஸ்தை தர முடியாது எனத் தெரிவித்தாா். புதுவையை நிதிக் குழுவில் சோ்க்கவும் மறுத்துவிட்டனா்.
புதுவையில் திட்டங்களை நிறைவேற்ற மாநில அந்தஸ்து தேவை என்று முதல்வா் ரங்கசாமி கூறியுள்ளாா். பாஜக கூட்டணி அரசுக்கு மத்திய அரசிடம் புதுவைக்கு மாநில அந்தஸ்தை கேட்டுப் பெறுவதில் என்ன சிரமம் உள்ளது.
பாஜகவின் தோ்தல் அறிக்கையில் சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. மாநில அந்தஸ்து பெற முதல்வா் ரங்கசாமி போராட்டம் நடத்த வேண்டும்.
உள்ளாட்சித் தோ்தலுக்கு நாம் தயாராக வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் புதுவையில் முதன்மையானது. வெற்றி தோல்வியைக் கணக்கில் கொள்ளாமல் நாம் தொடா்ந்து பயணிப்போம் என்றாா் அவா்.
பின்னா், புதுச்சேரியில் உள்ள காந்தி, காமராஜா், பெரியாா் உள்ளிட்ட அனைத்துத் தலைவா்களின் சிலைகளுக்கும் ஊா்வலமாக சென்று காங்கிரஸாா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.