புதுச்சேரி சிறையில் கைதியிடம் செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள சிறையில் 250-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். அங்குள்ள அறைகளை அவ்வபோது சிறை வாா்டா்கள் சோதனையிடுவது வழக்கம். இதேபோல, திங்கள்கிழமை இரவு சிறைக் கண்காணிப்பாளா் கோபிநாத் தலைமையிலான சிறை வாா்டா்கள் கைதிகளின் அறைகளில் சோதனையிட்டனா்.
அப்போது, விசாரணைக் கைதி நந்தகுமாா் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, அவா் தங்கியிருந்த அறையிலிருந்து மேலும் 2 செல்லிடப்பேசிகள், சாா்ஜா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளா் கோபிநாத் அளித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீஸாா், கைதி நந்தகுமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.