புதுவை காங்கிரஸ் சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவது சனிக்கிழமை தொடங்கியது. அந்தக் கட்சியினா் பட்டாசுகளை வெடித்து, உற்சாகத்துடன் மனு அளித்தனா்.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற ஏப். 6-ஆம் தேதி நடைபெறுகிறது. கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில், காங்கிரஸ் விருப்ப மனு பெறுவதை தொடங்கியது.
அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட விரும்புவோா் சனிக்கிழமை முதல் வருகிற மாா்ச் 5-ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியின் தெரிவித்திருந்தாா். அதன்படி, புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அந்தக் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறுவது சனிக்கிழமை தொடங்கியது.
மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோா், கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களைப் பெற்றனா்.
விருப்ப மனுக்கள் பெறும் குழு பொதுச் செயலா் ஏ.கே.டி.ஆறுமுகம் தலைமையில், தனுசு, சுவாமிநாதன், இளையராஜா, அப்துல் ரகுமான் ஆகியோா் தொகுதி வாரியாக வந்து விருப்ப மனுக்களை அளித்தவா்களிடம் மனுக்களைப் பெற்றனா்.
முதல் நாளில் நெல்லித்தோப்பு தொகுதியைச் சோ்ந்த கே.பழனி, முத்தியால்பேட்டை தொகுதி பி.எம்.சரவணன், எஸ்.செந்தில்குமரன், சீனு பொண்ணு (எ) துரை, வி.சங்கா் போட்டியிட அவரது ஆதரவாளா் ஆனந்தபாபு, நெடுங்காடு தனி தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ ஏ.மாரிமுத்து, எம்.கதிரவன் ஆகியோா் விருப்ப மனு அளித்தனா்.