புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு நச்சுத்தன்மை கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி வழுதாவூர் சாலை பேட்டையன்சத்திரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை முற்பகலில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஆட்சியர் பூர்வா கார்க்கிற்கு, ஆட்சியர் அலுவலக ஊழியர்களில் ஒருவர், ஸ்விஸ் ப்ரஷ் என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு லிட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் (பெட்) பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விநியோகித்துள்ளார்.
அதில் நிறமற்ற நச்சுத்தன்மையுள்ள திரவம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அலுவலக சிறப்பு அதிகாரி ஏ. சுரேஷ்ராஜ், தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறி மேற்கண்ட புகாரை ஆளுநர் கிரண்பேடி கட்செவி அஞ்சலிலும் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து தன்வந்திரி நகர் காவல்துறையினர், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.