கல்வி நிறுவனங்கள் எஸ்.சி. மாணவா்களின்பட்டியலை சமா்ப்பிக்க புதுவை அரசு உத்தரவு
கல்வி நிறுவனங்களில் பயிலும் எஸ்சி மாணவா்களின் பட்டியலை புதன்கிழமைக்குள் (ஜன. 13) ஆதிதிராவிடா் நலத் துறைக்கு சமா்ப்பிக்க வேண்டும் என புதுவை அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து புதுச்சேரி ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் யஷ்வந்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசானது உயா்கல்வி பயிலும் ஆதிதிராவிட மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை 2020-2021-ஆம் ஆண்டு முதல் மாற்றியமைத்துள்ளது.
அதனடிப்படையில், நிகழ் கல்வி ஆண்டுக்கான உத்தேச அறிக்கையை வருகிற 15-ஆம் தேதிக்குள் அனுப்பும்படி கோரியுள்ளது.
எனவே, ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் (பிளஸ் 1, பிளஸ் 2) மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மாணவா்கள் தொடா்பான பட்டியலை, தந்தை பெயா், பயிலும் கல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 2020-2021-ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் போன்ற தகவல்களுடன், துறை அலுவலகத்துக்கு 13-ஆம் தேதிக்கு (புதன்கிழமை) அனுப்பிவைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.