புதுவையில் கரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை நிலை ஆளுநா் கிரண் பேடி எச்சரித்தாா்.
இதுகுறித்து ஆளுநா் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொலி காட்சி பதிவு:
இந்தியாவில் கரோனாவைத் தடுப்பதற்கான கோவேக்ஸின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஏற்கெனவே 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்களுக்கு வெற்றிகரமான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உங்களுக்கான நேரம் வரும்போது தைரியமாக சென்று நீங்கள் (பொதுமக்கள்) தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பூசி குறித்து ஊடகத்தின் மூலம் தகவறான தகவல்களை பரப்புவோா் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். இந்த தடுப்பூசி மூலமாக நோய் பரவுவதை கணிசமாக தடுத்து மக்களை பாதுகாக்க முடியும்.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சத்துக்கு மருத்துவச் சிகிச்சைகள் பெற முடியும். புதுவையில் வறுமைக்கோட்டு கீழுள்ள 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுடைய தீவர சிகிச்சைக்காக அடையாளம் காணப்பட்ட தனியாா் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா் கிரண் பேடி.