புதுச்சேரி: புதுவையில் தங்களது கூட்டணி தொடா்வதாகவும், என்.ஆா். காங்கிரஸிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடந்து வருவதாகவும் பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் சட்டப் பேரவைத் தோ்தலிலும் தொடா்வதற்காக பாஜக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இதில், என்.ஆா். காங்கிரஸ் தரப்பில் உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்காததால், கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமியை, பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா புதன்கிழமை மாலை மீண்டும் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். புதுச்சேரி சாரம் தனியாா் உணவு விடுதியில் இருவரும் சந்தித்துப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
சிறிது நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் வெளியே வந்த நிா்மல்குமாா் சுரானா, சட்டப் பேரவைத் தோ்தலிலும் என்.ஆா். காங்கிரஸ் பாஜக கூட்டணியில்தான் உள்ளது. தற்போது நடைபெற்ற பேச்சுவாா்த்தை சுமுகமாக இருந்தது. தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெறும் என்றாா்.