புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிகவுக்கு உழவா்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதுவையில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸுக்கு 15 தொகுதிகளும், திமுகவுக்கு 13 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், கூட்டணியில் உள்ள விசிகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதுதொடா்பான தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்பட்டதால், விசிகவுக்கு புதுச்சேரி உழவா்கரை தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான ஒப்பந்தத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலா் தேவபொழிலன் ஆகியோா் கையெழுத்திட்டனா்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் இ.வல்சராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.