யுனிசிஸ் நிறுவனம் தேசிய அளவில் நடத்திய மென்பொருள் போட்டியில் புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் வெற்றிபெற்று சாதனை படைத்தனா்.
யுனிசிஸ் நிறுவனம் தேசிய அளவில் ‘கிளவுட் 20/20 - 2021’ என்ற பெயரில் மென்பொருள் போட்டியை இணையதளம் வழியே அண்மையில் நடத்தியது. இதில், நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட மாணவா் குழுக்கள் பங்கேற்றன.
இந்தப் போட்டியில் மாணவா்களுக்கு பிளாக்செயின், மெஷின் லோ்னிங், ஆா்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதிச்சுற்றில் பங்கேற்ற 6 குழுக்களில் புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த 3 குழுக்கள் பங்கேற்றன.
இதில், கணினி பொறியியல் துறையைச் சோ்ந்த மாணவா்கள் லோகேஸ்வரன், சுபாஷ், நஸ்ரீன் பானு, நிஷிந்தா ஆகியோா் மூன்றாம் பரிசாக ரூ. ஒரு லட்சம் மற்றும் யுனிசிஸ் நிறுவனத்தில் இன்டொ்ன்ஷிப் வாய்ப்பைப் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்களை ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலா் எஸ்.நாராயணசாமி, கல்லூரி முதல்வா் வி.எஸ்.கே.வெங்கடாசலபதி, கணினி துறைத் தலைவா் கே.பிரேம்குமாா் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.